Saturday, June 19, 2010

ராவணன் - ஒரு இராமன்

மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ராவணன்.

மணிரத்தினம் ++ ரோஜா, தளபதி++ என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.

பக்பக்பக்பக்பக்... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... இப்படியாக ராவணன் படத்தின் ஒரு காட்சியில் அபாரமாக வசனம் பேசுகிறார் விக்ரம்.


வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான். பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.


வீராவாக விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும் பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல் மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன் இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டும். ஐஸ் மேலிருக்கும் காதலை கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸில் ஐஸ் திரும்பி வந்ததும் அவர் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் இருக்கிறதே.. உலகத்தரம். மனுஷன் பின்னியெடுக்கிறார். ஆனால் “பக்..பக்’கென கோழி கத்துவது போலும், டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய் தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை. அதெல்லாம் அவரை ஒரு டெரராக காட்ட நினைத்தது வி.இ.நீராய் தான் முடிந்திருக்கிறது.

ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம், கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம், நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால் என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம் முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.

எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல் வன்மத்துடன் அலைகிறார். ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன் குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டனின் கைவண்ணம். படம் முழுவதும் ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க வைக்கும். ஆனால் பாடல் போஸ்ட் ஆன இடம் தான் கொஞ்சம் வழுக்கல். பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்.

ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே. ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

மணி ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல் மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை. ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட ஆரம்பிக்கும் பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி.. சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில் காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ் ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள் மணிக்கே உரித்தானது.
எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான். முதல் பாதியில் கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம் பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது.

ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய் சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..

படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும் அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி, பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப் செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது.
கார்த்திக் கேரக்டர் தான் அனுமன் கேரக்டர் என்று பிரிதிவிக்கு காட்டில் வழி காட்டும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு ஆரம்ப காட்சியில் மரத்துக்கு மரம் தாவி காட்ட வேண்டிய நிர்பந்தம். அதை விட காமெடி ஐஸ் இருக்கும் இடத்தில் அவர் புருஷன் அனுப்பிய ஆள் அடையாள அட்டை வேண்டுமானால் காட்டுகிறேன் என்று சொல்லுமிடம், அதே போல் ப்ரியாமணியை போலீஸார் தூக்கிக் கொண்டு போகும் போது சூர்பனைகையை தான் இது என்பதை சொல்லாமல் சொல்வதை போல, “இப்ப என்ன செய்யட்டும் உன் மூக்கை அறுக்கட்டுமா” என்று போலீஸ் பேசும் வசனம் எல்லாம் மணி சார்.. உங்களிடமிருந்தா..?

அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம், என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன்
. இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.

நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்.

3 comments:

  1. இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

    அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

    சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

    இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

    ReplyDelete
  2. இதுவரை படித்த விமர்சனத்திலேயே அருமையான விமரசனம் ப்ரேம் குமார்,இதை ஓட்டு போட்டு தமிழிலிஷில் முன்னே கொண்டு வருகிறேன் பாருங்கள்,ஃபாலோவரும் ஆகிவிட்டேன்.
    இனி ஒவ்வொரு படத்துக்கு எழுதனும்,மொபைல் எண் கொடுத்தால் மீட் பண்ணலாம்-பாலா

    ReplyDelete
  3. இதுவரை படித்த விமர்சனத்திலேயே அருமையான விமரசனம் ப்ரேம் குமார்,இதை ஓட்டு போட்டு தமிழிலிஷில் முன்னே கொண்டு வருகிறேன் பாருங்கள்,ஃபாலோவரும் ஆகிவிட்டேன்.
    இனி ஒவ்வொரு படத்துக்கு எழுதனும்,மொபைல் எண் கொடுத்தால் மீட் பண்ணலாம்-பாலா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!