இன்றைக்கு உலகெங்கும் பரவியிருக்கிற கிரிக்கெட் (cricket), டென்னிஸ் (tenis), ஹாக்கி (hockey), பேட்மின்டன் (batminton), உதைப் பந்தாட்டம் (foot ball) எனப் பல விளையாட்டுகள்யாவுமே மேற்றிசை நாடுகளில் உருவாக்கப் பட்டவை. இவற்றைப் பரப்ப ஆங்கில ஏகாதி பத்தியம் தனது காலனித்துவ ஆட்சியின் மூலம் உதவியது. இன்றைக்கு மேற்சொன்ன விளையாட்டுகளோடு கூடிய வர்த்தகத்தின் தொகை கணக்கிட முடியாது. இவற்றின் மூலம் நேரடியாக - மறைமுகமாக லாபம் அடைந்தவர்கள் மேல்நாட்டவரே!
மேற்சொன்ன விளையாட்டுகளை ஆங்கிலத் திரைப்படங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தின. இதே போன்று புரூஸ்லீ என்ற நடிகரால் கராத்தே, குங்பூ, தேக்கேவா போன்ற விளையாட்டுகள் உலகெங்கும் பரவின. இதற்குத் தமிழகம் விதி விலக்கு அல்ல. தமிழகத்தில் சிறிய-பெரிய நகரங்களில் சீன, ஜப்பானிய விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுக்கிற சிறு சிறு நிலையங்கள் உருவாகிவிட்டன.
இவ்வகை விளையாட்டுகளைத் தமிழ்த் திரைப்பட நாயகர்களும் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். தமிழர்களைச் சுலபமாக சென்றடையக் கூடிய தொலைக்காட்சி ஒளிபரப்புகள், அந்நிய விளையாட்டுகளைத் தூக்கிப் பிடிக்கின்றன. பெரும்பாலான நாளிதழ்களும் வார இதழ்களும் ஏனைய ஊடகங்களும் இதே வழியையே பின்பற்றுகின்றன.
இதன் எதிரொலியாக கராத்தே, குங்பூ, தேக்கோவா போன்றவை பயிற்சி வகுப்புகளாக இங்கு பரவி இருக்கின்றன. பெண்களும் இவற்றைப் பழகுகின்றனர். ஏனையோர் கிரிக்கெட், பேட்மிட்டன், உதைப்பந்தாட்டம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளைப் பயின்று வருகிறார்கள். மிகக் குறைந்தோரே தமிழர் விளையாட்டுகளைப் பயின்று வருகிறார்கள்.
தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெள்ள மெள்ள தமிழர்களுக்கே மறந்து வருகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் கிராம விளையாட்டு களாகத் தள்ளப்பட்டன. கிராமங்களிலும் அவை வலுவிழந்து தள்ளப்பட்டன. அவை ஆண்களுக்கான சல்லிக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், உரிமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம், மல், வில் பெண்களுக்கான தாயம் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, உயிர்மூச்சு, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம்.
நேற்றுவரை கிராமப்புறத் தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காண வில்லை. அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நியக் கலாசாரமேயாகும். கண் மூடித்தனமான ஆங்கில வழிக்கல்வியுடன் கூடிய நாகரிகம், கிராமத்துத் தமிழ்மரபுகளை இன்று எல்லாத் துறைகளிலும் அழித்து வருகிறது. ஆங்கிலம் சார்ந்த விளையாட்டு வேண்டாம் என்பது என் கருத்தல்ல. தமிழரின் விளையாட்டும் இருக்கட்டுமே. உலகெங்கும் வாழ்கிற எட்டு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டை முன் னெடுக்க முடியாதா என்ன? தமிழர் சுய அடை யாளத்தைப் பறிகொடுத்து இன்னோர் இனத்தின் அடையாளத்தைச் சுமக்க வேண்டுமா?
தமிழரின் விளையாட்டுகளைப் புறக்கணிப்பது நம்மை நாமே புறக்கணிப்பதற்குச் சமமானது.
சங்க காலத்தில் விளையாட்டை வினைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கடுவன் இள மள்ளனார், கருவன் மள்ளனார், ஞாழார் மகனார் மள்ளனார், மள்ளனார் ஆகிய நான்கு புலவர்களின் பெயர்கள், மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றன. இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆகவே அக்காலத்தில் இயற்றமிழிலும் உடல்பயிற்சிக் கலையிலும் வல்லவர்கள் இருந்திருக்க வேண்டும்.
தற்காலத்தில் உடல்பயிற்சி நிலையங்கள் இருப்பதைப் போல் சங்க காலத்தில் இருந்த தற்கான சான்றுகளாக போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பயிற்சிக் கூடங்களுக்காக இருந்திருக்கின்றன. பட்டினப் பாலையில் 'முரண்களரி' என்பது பயிற்சிக்கூடமே. இன்றைக்குக் களரி என்ற சொல், கேரளாவில் இருக்கிறது. களரிப் பணிக்கர் என்பது உடல்பயிற்சிக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியரே.
சங்க கால இலக்கியக் குறிப்புப்படி 37-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் விரிவாகக் காணலாம்.
No comments:
Post a Comment